திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க !
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க !
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க !
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க !
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி ! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப்பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி !
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,
சிந்தை மகிழச், சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்.
கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே! நின் பெரும்சீர்,
பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்
புல் ஆகிப் , பூடு ஆய், புழுவாய் , மரம் ஆகி
பல்விருகம் ஆகி, பறவையாய், பாம்பு ஆகிக்
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்,
வல்லசுரர் ஆகி ,முனிவராய், தேவராய்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்!
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;
உய்ய, என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள்
“ஐயா” என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற நுண்ணியனே!
வெய்யாய் ! தணியாய் ! இயமானனாம் விமலா !
பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி,
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே !
ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்
நாற்றத்தின் நேரியாய் ! சேயாய் ! நணியானே !
மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!
கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால் போலச்
சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் !
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் ! விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய், எம்பெருமான் ! வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம், பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால், விமலா! உனக்குக்
கலந்த அன்பு ஆகிக், கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம் தன்மேல் வந்தருளி, நீள்கழல்கள் காஅட்டி
நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு,
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே!
மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!
பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே!
நேச அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட
பேராது நின்ற பெரும் கருணைப் பேராறே !
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிராய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே !
அன்பருக்கு அன்பனே! யாவையுமாய், அல்லையுமாம்
சோதியனே! துன் இருளே தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம், நடு ஆகி, அல்லானே!
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்த மெய்ஞ் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்
நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே!
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே !
காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே!
ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவாம்
தேற்றனே ! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்
ஊற்றான உண் ஆர் அமுதே! உடையானே!
வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன்; “எம் ஐயா! அரனே! ஓ! ” என்று என்று
போற்றி, புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே !
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே!
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!
அல்லல் பிறவி அறுப்பானே! ‘ஓ’ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்
